Tamilnadu

“இதுவரை போகாம இருந்திருந்தா, இதை கேட்டதும் போயிருப்பாங்க” : நிதியமைச்சர் கிண்டல் - சபையில் சிரிப்பலை!

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறையின் மேம்பாட்டுக்கும் பல்வேறு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்ஜெட் உரை துவங்குவதற்கு முன்பு, வேண்டுமென்றே அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களைக் கண்டித்தார்.

முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இது கூட தெரியாதா? இதுதான் அவை மரபா என கடுமையாக கண்டித்தார். இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வலுப்படுத்தப்படும். நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

பின்னர், “ஒருவேளை எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் அமர்ந்திருந்தால், ஊழல் தடுப்புத்துறை வலுப்படுத்தப்படும் என்ற இந்த அறிவிப்பை கேட்டபிறகு வெளிநடப்பு செய்திருப்பார்களோ.. என்னவோ” என கிண்டலாகப் பேசினார்.

Also Read: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,896 கோடி.. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு முழு விவரம் இங்கே..! #TNBudget