Tamilnadu

’அயன் படத்தை மிஞ்சிய கடத்தல்’ : கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் சிக்கிய பலே கில்லாடி : ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவா், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் எந்த பொருட்களும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அந்த பயணியின் நடை சற்று வித்தியாசமாக இருந்தது. கால்களில் அணிந்திருந்த செருப்புகளை இழுத்து இழுத்து நடந்தாா். இதனால் சுங்க அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து, அவரின் செருப்புகளை கழற்றி சோதனையிட்டனா். ஆனால் செருப்புகளில் எதுவும் இல்ல. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் அவருடைய இரண்டு கால்களையும் தூக்கிப் பார்த்தனா். 2 கால்களின் அடிப்பாதங்களில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரித்து பாா்த்தபோது, தங்கப்பசை அடங்கிய சிறிய பாா்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

இரு கால்களின் அடியில் 240 கிராம் தங்கப்பசை இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.12 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் 12 லட்சம் மதிப்புடைய தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். அதோடு மிகவும் நூதனமான முறையில் தங்கத்தை காலில் ஒட்ட வைத்து மறைத்து எடுத்து வந்த அந்த சென்னை பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்து வருகின்றனர்.

Also Read: மருத்துவர் தம்பதியிடம் நூதன முறையில் நகை திருட்டு.. விடுமுறைக்கு வந்த இடத்தில் கைவரிசை காட்டிய உறவினர் !