Tamilnadu

அ.தி.மு.க ஆட்சியில் பாஜக அரசை விமர்சித்த சோபியாவுக்கு நேர்ந்த கொடுமை: ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

அ.தி.மு.க ஆட்சியின்போது தூத்துக்குடி விமானத்தில் பா.ஜ.க ஆட்சியை விமர்சித்ததாக ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், சோபியாவுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோது 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரைப் பார்த்ததும் சோபியா என்ற மாணவி, பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்டார்.

இதனையடுத்து, தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோஷமிட்ட சோபியாவுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு சோபியாவை போலிஸார் கைது செய்தனர்.

அ.தி.மு.க ஆட்சியின்போது, விசாரணை என்ற பெயரில் சோபியா கடுமையாக அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பா.ஜ.கவை விமர்சித்ததாக மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது என்று மனித உரிமை ஆணைய நீதிபதி கூறினார். மேலும், மாணவியின் தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலையிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயையும் மற்ற காவல் துறையைச் சேர்ந்த 6 நபர்களிடம் தலா 25 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.