Tamilnadu

'இந்துத்துவ தீவிரவாதி' எனக் கூறிக்கொண்டவர் கைது - சைபர் க்ரைம் போலிஸார் அதிரடி!

கோட்சே பெரியார், அம்பேத்கரை கொன்றிருக்க வேண்டும் என வன்முறையைத் துண்டும் வகையில் பேசிய இந்துத்வ ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

யூடியூப் சேனல் ஒன்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு உமா ஆனந்தன் என்பவர் வெற்றி பெற்றது குறித்த அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்டது.

அப்போது ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் எனும் நபர், தான் ஒரு இந்து தீவிரவாதி என்பதில் பெருமை கொள்வதாகவும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டுத் தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றிருக்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சர்ச்சையான கருத்து கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிட தலைவர் கண்ணதாசன் புகார் அளித்தார். இதேபோல திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சந்தோஷ் என்பவர் புகார் அளித்தார்.

இந்நிலையில், தன்னை இந்து தீவிரவாதி என கூறிக்கொண்டு, தந்தை பெரியார், அன்ணல் அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோரை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் என வன்முறைக் கருத்து சொன்ன நபரை சென்னை சைபர் கிரைம் போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் மீது கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுவதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: "கோட்சே இவங்களையும் போட்டுத்தள்ளி இருக்கணும்” : வன்முறைப் பேச்சு குறித்து போலிஸில் புகார்!