Tamilnadu

உஷார்... வாட்டர்ஹீட்டர் போடப்பட்டிருந்த தண்ணீரை தொட்டு பார்த்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!

சென்னை குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி ஜெயலட்சுமி (65). இவரது கணவர் இறந்த நிலையில், தனது மகள் சந்திராவுடன் வசித்து வந்துள்ளார்.

இன்று காலை வழக்கம்போல் வாட்டர் ஹீட்டர் மூலமாக சில்வர் பாத்திரத்தில் சுடு தண்ணீர் போட்டுவிட்டு, சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடாகிவிட்டதா என்று மின்சாரத்தை துண்டிக்காமல் தொட்டுப் பார்த்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அவரது மகள் சந்திரா உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலட்சுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலிஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: அரசு மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி சட்டவிரோத கருக்கலைப்பு.. 2 குழந்தைகளை பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி!