Tamilnadu

1 மாநகராட்சி.. 3 நகராட்சி.. 8 பேரூராட்சி என மொத்தமாக கைப்பற்றியது திமுக கூட்டணி - கரூரில் இமாலய வெற்றி!

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. மாவட்டத்திலுள்ள 1 மாநகராட்சி , 3 நகராட்சி, 8 பேரூராட்சிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றியுள்ளது தி.மு.க கூட்டணி.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் உள்ள 246 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளில் ஏற்கனவே, 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதம் உள்ள 241 பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க கூட்டணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முன்னணி வகித்தது. தொடர்ந்து முன்னணியில் இருந்த திமுக கூட்டணி இறுதி நிலவரப்படி மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி 3 நகராட்சி 8 பேரூராட்சிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி தி.மு.க கூட்டணி முன்னணி நிலவரம் குறித்து அறிந்த தி.மு.க கூட்டணி கட்சியினர் வாக்கு எண்ணும் மையங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றிச் சான்றிதழ்களை வழங்கினர். வெற்றி சான்றிதழ்களை பெற்ற வேட்பாளர்கள், தொண்டர்கள் உற்சாகமாக வாக்கு எண்ணும் மையத்திலிருந்து சென்றனர்.

Also Read: மைக்கேல்பட்டி, ஹிஜாப், கோவை, மயிலாப்பூர், ஒத்த ஓட்டு : சரமாரியாக சம்பவம் செய்த மக்கள் - வென்றது தி.மு.க!