Tamilnadu

அரசு கொடுத்த ஊக்கத்தொகை ₹78 லட்சத்தை ஆட்டையப்போட்ட டெல்லி கில்லாடிகள்: சென்னை போலிஸிடம் சிக்கியது எப்படி?

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

அதில், தான் வெளிநாடுகளுக்கு துணி வகைகள் ஏற்றுமதி செய்யும் நடத்தி வருவதாகவும், அதற்கென ஒன்றிய அரசின் வெளிநாட்டு வணிகள் தொடர்பான DGFT இணையதள முகப்பில் கணக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அரசாங்கம் தனக்கு அளித்திருந்த இன்சென்டிவ் பாயிண்ட்களை தன்னுடைய அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு மோசடி நபர்கள் மாற்றிவிட்டதாகவும் அதனால் தனக்கு 78 லட்சத்து 32 ஆயிரத்து 444 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.

Also Read: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வே வேலை; கூறுப்போட்டு விற்று 1 கோடி மோசடி; சுருட்டல் மன்னன் சிக்கியது எப்படி?

மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர், DGFT போர்டல் IP விவரங்கள், மோசடி நபர்களால் மாற்றியமைக்கப்பட்ட மொபைல் எண், இமெயில் ஐடி யின் IP விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, குற்றவாளி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இதனையடுத்து, குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரியவந்ததன் அடிப்படையில் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் டெல்லியில் விசாரணை செய்தனர். அதன்படி மோசடியில் ஈடுபட்ட அருண்குமார் (41) , சச்சின் கார்க் (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 2 லேப்டாப்கள், 9 செல்போன்கள் 1 பென்டிரைவ் மற்றும் 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

இக்குற்றத்திற்கு மூளையாக செயல்பட்ட பர்வீன் அகர்வால், மனிஷ் அகர்வால் ஆகிய இருவரும் இதேபோன்ற மற்றொரு வழக்கில் ஹரியானா மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதால், அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அருண்குமார் மற்றும் சச்சின் கார்க் ஆகிய இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டு இன்று (19.02.2022) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பெருகி வரும் சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: ”OLXல் விற்று GPS-ஐ வைத்து காரை திருடி சுகபோக வாழ்வு” -பெங்களூரில் சிக்கிய ஹை-டெக் கேரள திருட்டு கும்பல்!