Tamilnadu

ஆள் வைத்து மாமியாரிடமே கொள்ளை.. மருமகள் வாக்குமூலத்தால் போலிஸ் ஷாக்!

சென்னை ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி லதா. இந்த தம்பதியுடன் வினோத்குமாரின் தாயார் லலிதாவும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் லலிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி, லலிதா அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றார்.

பின்னர், வீட்டிற்கு வந்த மருமகள் லதாவிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவரிடம் செல்போனில் தகவல் கூறியுள்ளார். பிறகு உடனே இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது லதா இருசக்கர வாகனத்தில் ஒருவரை அழைத்து வந்து அவரை வீட்டின் அருகே இறக்கிவிடும் காட்சிப் பதிவாகி இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலிஸார் லதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் ஆளவைத்து மாமியாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது தங்கையில் மருத்துவச் சிகிச்சைக்காக மாமியாரின் தங்கை நகையை அடகு வைத்துள்ளார் லதா.

பின்னர் நகையை மீட்டு கொடுக்கும்படி லதாவிடம் மாமியார் லலிதா அடிக்கடி தொல்லை கொடுத்துவந்துள்ளார். இதையடுத்து நகையை எப்படியோ மீட்டு கொடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவர் மாமியாரிடமிருந்த நகையை பறிக்க திட்டம்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “தீக்குளித்த Livin காதல் ஜோடி.. பெண் பலி - வாலிபருக்குத் தீவிர சிகிச்சை” : போலிஸ் விசாரணை - நடந்தது என்ன?