Tamilnadu

கடற்கரைக்குச் சென்று வீடு திரும்பிய போது நடந்த கொடூரம்.. தந்தையும், 2 குழந்தைகளும் பரிதாப பலி!

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பூந்தமல்லி செல்லும் புறவழிச்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று லாரி நின்றிருப்பதை கவனிக்காமல் அதன் மீது வேகமாக மோதியது.

இதில் வாகனத்தில் வந்த வாலிபர் மற்றும் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த கோபிநாத், அவரது மகன் கிரி, மகள் மோனிகா என்பது தெரியவந்தது. மேலும் கோவளம் கடற்கரைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது.

சாலை விபத்தில் தந்தையும், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தனியாகச் செல்லும் பெண்களே குறி.. தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட இந்திய கும்பல்: சிக்கியது எப்படி?