Tamilnadu

'வீட்டை விட்டு துரத்திட்டாங்க..' - ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த மூதாட்டி : அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்!

மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. மூதாட்டியான இவரது கணவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு கேசவன், முருகவேள் என இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் உயிரிழந்த பிறகு மூத்த மகன் கேசவன் வீட்டில் வசித்து வந்துள்ளார் லட்சுமி. பின்னர் இரண்டு மகன்களுக்கும் சொத்தை பிரித்துக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து லட்சுமி வங்கியில் வைத்திருந்த ரூ. 2 லட்சத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்டு மகன்கள் தகராறு செய்து வந்துள்ளனர். பின்னர் அவரது ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளனர்.

மேலும், அவரிடம் இருந்த 10 சவரன் நகைகளையும் பறித்துக் கொண்டுள்ளனர். பின்னர் அவரை மகன்கள் வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்துதான் மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மூதாட்டி கொடுத்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Also Read: மக்கள் நல்வாழ்வுத்துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘திராவிட மாடல்’ - 'The Hindu' நாளேடு கட்டுரை!