Tamilnadu

“சைக்கிளில் சென்று கொள்ளையடித்து வந்த திருடர் குல திலகம்” : போலிஸில் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் பெஞ்சமின். இவர் மளிகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு அடுத்த நாள் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, கடையிலிருந்த ரூ. 25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று,சிறிது நேரம் கழித்து வெளியே வரும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இதையடுத்து இந்த நபர் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே சைக்கிளில் சுற்றிவந்த முதியவரை போலிஸார் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது, மளிகைக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முதியவரான இவரது பெயர் ராஜேந்திரன். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்தவர். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 29 வழக்குகள் மட்டும் திருட்டு வழக்குகள் ஆகும்.

மேலும் இவர் திருடச் செல்லும் இடங்களுக்குச் சைக்கிளிலேயே சென்று திருடிவந்துள்ளார். இதனால் இவர் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது. தற்போது மளிகைக்கடை திருட்டு வழக்கில் போலிஸாரிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

Also Read: YOUTUBE பார்த்து வெடிமருந்து தயாரித்த இளைஞர்கள் கைது - விசாரணையில் ‘திடுக்கிடும்’ தகவல் - நடந்தது என்ன?