Tamilnadu

டப்பிங் யூனியனில் பல லட்சம் மோசடி... சிக்கிய ராதாரவி - விசாரணை அறிக்கையில் நிரூபணம்!

நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது நிரூபணமாகி உள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த நடிகர் ராதாரவி, டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் 10 ஆண்டுகளாக வெவ்வேறு பதவிகளை வகித்தவர். இவர் மீது பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

மேலும், வரவு செலவு கணக்கு கேட்பவர்களை சங்கத்தில் இருந்து நீக்குவது, சம்பளத்தை யாரும் நேரடியாகப் பெறாமல் தான் நியமிக்கும் கமிஷன் தரகர்கள் மூலம் பெறச்செய்வது என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இவ்வாறு ராதாரவி, டப்பிங் யூனியனில் பல விதங்களில் ஊழல் செய்திருப்பதாக அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். இதையடுத்து இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க நிர்வாகத்தின் மீது வந்துள்ள புகார்கள் அனைத்தையும் விசாரிக்கும்படி தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி விசாரணை நடத்தி 47 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது நிரூபணமாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2017 முதல் தொழிலாளர் நலத்துறைக்கு போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மோசடி, கணக்கு அறிக்கை சமர்ப்பிப்பதில் பொய்க் கணக்கு என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடந்த விசாரணையில், ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தொழிலாளர் நலத்துறை மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

Also Read: சகோதரி, பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த கணவர்... சிறையில் தள்ளிய மனைவி - பின்னணி என்ன?