Tamilnadu

ரவுடிகளுக்கு DARE ஆபரேஷன்; செயின் பறிப்புக்கு DACO ஆபரேஷன் - களத்தில் இறங்க சென்னை போலிஸ் அதிரடி திட்டம்!

சென்னையில் காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 115 பேருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேலைக்கான பணியாணையை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், வேலை பெற்றுள்ள அனைவரும் உடனடியாக பிடிக்கவில்லை என பணியில் இருந்து விலகாமல், நிலைத்திருந்து அதிக அனுபவத்தை பெறுவதன் மூலம் அடுத்தடுத்த உச்சத்தை அடைய முடியும் என கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், நேற்று வரை 126 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான காவலர்களுக்கு வீட்டு தனிமையில் இருக்க பரிந்துரைக்கப்படுவதால் தனிமைப்படுத்தல் மையத்திற்கான அவசியம் இல்லை, வெறும் 6 காவலர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசி மற்றும் பொங்கல் பண்டிகைக்காக மக்கள் அதிகமாக சொந்த ஊருக்கு செல்வதால் இன்று முதல் சுழற்சி முறையில் 1200 காவலர்கள் வீதம் 3 ஷிப்டுகளில் 19ஆம் தேதி வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரவுடிகளை ஒழிக்க Dare ஆப்ரேஷன் கொண்டு வரப்பட்டு பல ரவுடிகள் கைது செய்யப்பட்டதால் கடந்த 3 மாதத்தில் 10 மடங்கு குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதே போல் செயின் மற்றும் செல்போன் பறிப்பு குற்றங்களை தடுக்க Daco ( direct against crime offender) என்ற பெயரில் புதிய ஆப்ரேஷனை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: ரயிலுக்கு அடியில் சிக்கிய 9 மாத குழந்தை, தாய்.. காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு : நடந்தது என்ன?