Tamilnadu

கொலைக்குப் பழிக்குப் பழி? - கட்டடத் தொழிலாளிக்கு கத்திகுத்து - போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!

திருவாரூர், கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். கட்டடத் தொழிலாளியான இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது.

பின்னர், திடீரென அந்த கும்பல் தாங்கள் எடுத்து வந்த கத்தியால் சுரேஷை சரமாரியாகக் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்திலிருந்த சுரேஷை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலை வழக்கு ஒன்றில் பழிவாங்கும் நோக்கத்தில் சுரேஷ் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு சுரேஷ் மற்றும் காளிதாஸ் ஆகியே இரண்டு பேர் ரமேஷ் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த வழக்கில் போலிஸார் சுரேஷ் மற்றும் காளிதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த காளிதாஸை ரமேஷ் தரப்பினர் கொலை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் கும்பல் ரமேஷின் தந்தை வேலாயுதம் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்நிலையில்தான் சுரேஷை, ரமேஷ் தரப்பினர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தொழிலதிபர் மகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.85 லட்சம் மோசடி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!