Tamilnadu

மெரினாவில் நிரந்தரமாக்கப்படுகிறதா மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை? - ககன்தீப் சிங் பேடி முக்கிய தகவல்!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளிகளுடன் கடல்பரப்பு வரை சென்று மாற்றுத்திறனாளிகள் கடல் நீரில் கால் நனைப்பதை கண்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ”மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு வேகமாக செல்லும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் இங்கு உள்ளது. மேலும் கடல் பரப்பிலும் தண்ணீரிலும் சுலபமாக செல்லும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சக்கர நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சக்கர நாற்காலி இல்லாமல் வரும் மாற்றுத் திறனாளிகளும் கடல் தரப்பிற்கு சுலபமாக செல்லலாம். இந்த நடைபாதை ஜனவரி 3ஆம் தேதி வரை புழக்கத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜனவரி 16ம் தேதி வரை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடைபாதையை நிரந்தரமான முறையில் அமைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் கூடிய விரைவில் இதனை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Also Read: வாசிப்பை வளர்த்தெடுக்க அசத்தல் ஏற்பாடு.. பெற்றோர்களுக்கென நூலகம் அமைத்த அரசுப் பள்ளி - குவியும் பாராட்டு!