Tamilnadu

தருமபுரி விபத்து சம்பவத்தில் திடீர் திருப்பம்.. நண்பர்களே தள்ளிக் கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம்!

தருமபுரி அருகே, மதுபோதையில் சரக்கு வாகனத்தின் மீது நண்பரை தள்ளி கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடிய நண்பர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் தென்னலஅள்ளி என்ற இடத்தில், கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, வாகனம் ஒன்று மோதியதில் மேகவேலு என்பவர் படுகாயமடைந்து விட்டதாகக்கூறி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் கடந்த டிச. 22-ஆம் தேதி உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரு சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது, மேகவேலு ஒரு வாகனத்தின் மீது தள்ளப்படுவது பதிவாகி இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த சிசிடி காட்சியில், மேகவேலு அவரது நண்பர்கள் விஜயகுமார், செந்தில்குமார் ஆகிய மூன்று பேரும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றின் மீது மேகவேலுவை தள்ளிவிட்டுள்ளனர். இதனால் அவர் தலையில் அடிபட்டு கீழே விழுவது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

மேகவேலுவின் நண்பர்கள் விஜயகுமார், செந்தில்குமார் இருவரும் தாங்கள் தப்பிப்பதற்காக சம்பவத்தை மூடி மறைத்து நாடகமாடியுள்ளதை போலிஸார் கண்டறிந்து, இருவரையும் கைது செய்தனர்.

Also Read: ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கிய போலிஸார்.. அடுத்தது என்ன?