Tamilnadu

பண மோசடி விவகாரம் : ஓடி ஒளிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜிக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’.. கட்டம் கட்டிய போலிஸ் ?

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.பி.மனோகர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படைகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், போலிஸார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விக்ரமின் சாமி படத்தில் வரும் வில்லனை போன்று வெவ்வேறு கார்களில் மாறி மாறி தப்பித்து வருகிறார் ராஜேந்திர பாலாஜி. இன்னும் ஒரு படி மேல் சென்று வெவ்வேறு கெட் அப்-ல் ராஜேந்திர பாலாஜி வலம் வருவதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால் போலிஸாரும் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருக்கும் 600 பேரின் செல்போன் எண்களை ட்ராக் செய்து அவரை பிடிப்பதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளி நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது

Also Read: வெவ்வேறு கார்.. வெவ்வேறு கெட்டப்.. தப்பித்து ஓடும் ராஜேந்திர பாலாஜி; விடாது விரட்டும் போலிஸ்!