Tamilnadu

மலர் மாலை வைத்து இறுதி மரியாதை.. கலைஞரின் உதவியாளர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி!

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பரும் அவரது உதவியாளருமான கோ.சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோ.சண்முகநாதனின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த சண்முகநாதன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, கண்ணீர் மல்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Also Read: யாருக்கு நான் ஆறுதல் சொல்வது? - கலைஞரின் உதவியாளர் மறைவுக்கு முதலமைச்சர் உருக்கத்துடன் இரங்கல்!