Tamilnadu

“இதயத் துடிப்பு நின்ற சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்” : அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி!

திருச்சி மாவட்டம், பூவாளுர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபா. சிறுமி சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மழைநீர் தேங்கியிருந்த தண்ணீரில் தவறுதலாகக் கால் வைத்துள்ளார். அந்த மழைநீர் தண்ணீரில் மின்கம்பம் எர்த் வயர் வழியாக மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், மின்சாரம் தாக்கப்பட்டு சிறுமி தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு முதலுதவி அளித்தனர். அப்போது சிறுமியின் இதயத் துடிப்பு நின்றுபோய் இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு உடனே சிறுமியை லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அப்போது பணியிலிருந்த அரசு மருத்துவர்கள் துரிதமாக, அதிநவீன கருவியின் உதவியோடு சிறுமிக்கு 5 முறை ஷாக் சிகிச்சை கொடுத்து உயிரைக் காப்பாற்றினர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சிறுமியைத் திருச்சி அரசு மகாத்மாக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமிக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமியின் உயிருக்கு இனி எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: 'எல்லோரும் சமம்'.. மீனவ மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கிய விவகாரம் - முதல்வர் கடும் கண்டனம்!