Tamilnadu

சாகசம் செய்து அசத்திய தோனி, பாண்டி... தமிழக போலிஸாரின் துப்பறியும் நாய்களைப் பார்த்து மகிழ்ந்த மாணவர்கள்!

சென்னை எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில் துப்பறியும் நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். காவல்துறை அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்க வைக்கும் வகையில் வாராவாரம் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக தமிழ்நாடு காவல்துறையில் உள்ள துப்பறியும் நாய்களின் சாகச நிகழ்ச்சி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. அண்ணா நகர் அரசு பள்ளி மாணவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஐந்திற்கும் மேற்பட்ட புலனாய்வு நாய்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன.

பயிற்சியாளர் சொல்வதைக் கேட்ட துப்பறியும் நாய்கள் வேகமாகவும் மெதுவாகவும் பின்னோக்கியும் தாவியும் சாகசங்கள் செய்து காட்டின. மேலும் காவல்துறை விசாரணையின்போது வழக்குகளில் நாய்களின் பங்கு என்ன அதன் முக்கியத்துவம் என்ன காவல்துறையின் சார்பில் வளர்க்கப்படும் நாய்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, உள்ளிட்ட விவரங்களை அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர்கள் மாணவர்கள் மத்தியில் விளக்கினர்.

கரிகாலன், தோனி, பாண்டி போன்ற நாய்களின் சாகசங்கள் மாணவர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக கைக்குட்டைகளை மோந்து பார்த்து யாருடையது என்பதை நாய் கண்டறிந்தது அனைவரையும் கவர்ந்தது.

ஆர்வத்துடன் கண்டு களித்த மாணவர்கள் அருங்காட்சியகத்திற்குள் முழுமையாகச் சுற்றி பார்த்தனர். பள்ளி மாணவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகள் வாராவாரம் நடைபெறும் என எழும்பூர் காவல் அருங்காட்சியக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்ற ரூ.2,576 கோடி கடன் தள்ளுபடி... அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!