Tamilnadu

"தமிழகத்தில் இதுவரை 7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

"தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது" என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 12ஆவது மெகா தடுப்பூசி முகாம் நிறைவடைந்த நிலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “22 மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் இன்று 16,05,293 பேர் இன்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தியுள்ளர்.

இவர்களில் 5 லட்சம் பேர் முதல் தவணையும், 11 லட்சம் பேர் இரண்டாம் தவணையும் செலுத்தியுள்ளனர். 7 கோடியை தாண்டியது இன்றுடன் தமிழகத்தில் செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை. ஒட்டுமொத்தமாக 78.35% பேர் முதல் தவணையும், 43.86% பேர் இரண்டாம் தவணையும் செலுத்தி முடித்துள்ளனர்.

இனி வாரம்தோறும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். தடுப்பூசி செலுத்தாதோரை தேடிக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவத்துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவப் பணியாளர்களின் நலன் கருதியே ஞாயிற்றுக்கிழமை முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்படுகிறது.

சென்னையில் 1 லட்சத்தைத் தாண்டி இன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை. மழைக்காலம் என்பதால் அனைவரும் காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “ஜனநாயகத்துக்கு யாரால் ஆபத்து..? கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள் பிரதமரே” : முரசொலி கடும் தாக்கு!