Tamilnadu

“மேடைக்கு அழைத்து முதல் வரிசையில் இருக்கை.. நல்ல அரசியல் நாகரீகம்”: முதல்வரை பாராட்டிய ‘தினமலர்’ நாளேடு!

முதல்வர் மு.க.ஸ்டாலின், விழா அரங்கிற்கு, மதியம் 12.40க்கு வந்தார். பயனாளிகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்று, பார்வையிட்டு, 12.45க்கு மேடையேறினார். விழா நடந்த வ.உ.சி. மைதானம், கோவை தெற்கு தொகுதிக்குள் இருப்பதால் பா.ஜ.க., கட்சியைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வந்திருந்தார். முதல்வருக்கு எதிரே, கீழ் வரிசையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

அதை கவனித்த மு.க.ஸ்டாலின், மேடைக்கு அழைத்து இருக்கையில் அமர வைக்க அறிவுறுத்தினார். முதல் வரிசையில் முதல் இருக்கை தரப்பட்டது. மேடைக்கு வந்த வானதி, முதல்வருக்கு வணக்கம் தெரிவித்து அமர்ந்தார்.

நிகழ்ச்சி நிரலில், எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதைப்படித்த முதல்வர், உதவியாளரை அழைத்து, சிறு மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தினார். விழா, 12.00 மணிக்கு துவங்குவதாக இருந்தது; 45 நிமிடம் தாமதமாக துவங்கிய போதிலும், பா.ஜ.க எம்.எல்.ஏ. பேசுவதற்கு முதல்வர் வாய்ப்பளித்தார்.

இதேபோல், மேடையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, சண்முக சுந்தரம் ஆகியோர் இருந்த போதிலும், மா.கம்யூ. எம்.பி. நடராஜன் பேசுவதற்கும் வாய்ப்பளித்தார். முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது நல்ல அரசியல் நாகரீகம்.

Also Read: “கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதித்த முத்திரைகள்” : ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு சிறப்புச் செய்தி!