Tamilnadu

டம்மி துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்.. அதிரடியாகக் கைது செய்த போலிஸ்!

சென்னை அடுத்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வடமலை. இவர் சத்தியமூர்த்தி நகர் வழியாக இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் இவரை திடீரென வழிமறித்துள்ளனர். மேலும் துப்பாக்கியைக் காட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயைப் பறித்துள்ளனர்.

இதுபோல் அந்த வழியாக வந்த நபர்களிடமும் துப்பாக்கியைக் காட்டி அந்த இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்த நிர்மல்குமார், செங்குன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகிய இரண்டு பேர்தான் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், அவர்கள் டம்மி துப்பாக்கியைக் காட்டி வழிபறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு இளைஞர்களையும் போலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்து டம்மி துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

Also Read: ஸ்பா, மசாஜ் மையம் பேரில் பாலியல் தொழில் நடத்துவதா? அதிரடி வேட்டையில் இறங்கிய சென்னை போலிஸார்!