Tamilnadu

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. துணிச்சலுடன் 5 பேரை மீட்ட இளைஞர்: திக்திக் நிமிடங்கள்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாடனேந்தல் அருகே சென்றபோது மாரநாட்டு கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதை பின்னால் வந்த முத்து என்ற வாகன ஓட்டி கவனித்துள்ளார்

உடனே தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் ஓடையின் வெள்ளத்தில் குதித்துச் சென்று ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்குத் திரும்பினார். காரில் 2 குழந்தைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய இளைஞர் முத்துவுக்கு குடும்பத்தினர் ஐந்து பேரும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் இளைஞர் முத்துவின் இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read: பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு IPS அதிகாரிகள்.. அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர்!