Tamilnadu

ஆம்புலன்ஸில் 200 கிலோ கஞ்சா சிக்கியது எப்படி? ஆந்திரா - இலங்கை திட்டத்தை முறியடித்து தஞ்சை போலிஸ் அதிரடி!

ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா மூட்டைகளை தஞ்சை தனிப்படை போலிஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அவ்வகையில், திருச்சி மத்திய மண்டல ஐஜி ரமேஷ் குமார் உத்தரவின் பேரில் தஞ்சை காவல்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நாகப்பட்டினத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்திய ஆம்புலன்ஸ் வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்த தஞ்சை தனிப்படை போலிசார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜாவை கைது செய்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் நாகை வழியாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சாவை கடத்த இருந்ததாகவும், போலிஸிடம் இருந்து தப்பிப்பதற்காகவே ஆம்புலன்ஸின் கஞ்சாவை மாற்றியதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த கடத்தல் விவகாரத்தில் எவரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் எனவும் விசாரணை முடுக்கிவிட்டிருப்பதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.