Tamilnadu

“15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் தொல்லை” : கார் ஓட்டுநர் போக்சோவில் கைது - நடந்தது என்ன?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்கண்ணன் வயது (23). இவர் டிப்ளமோ கம்யூனிகேஷன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அப்பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது விக்னேஷ்கண்ணன் பார்த்துள்ளார். அந்த பெண்ணிடம் முதலில் நட்பாக பேசிய விக்னேஷ் பின் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் பழகி வருவது அவரது பெற்றோருக்கு தெரிந்து அந்தப் பெண்ணின் தாயார் இந்த காதலை கண்டித்துள்ளார்.

இதனால் இருவரும் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் அருகேயுள்ள வாஞ்சூர் அழைத்துச்சென்று தங்கியுள்ளனர். பெண் காணாதது குறித்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். காவல்துறையினர் தேடி வந்த நிலையில், விக்னேஸ்வரனை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜாமினில் வெளிவந்த விக்னேஷ் மீண்டும் ஒரு புதிய செல்போனை வாங்கி அந்தப் பள்ளி மாணவியிடம் கொடுத்து தன் காதலை வளர்த்துள்ளார்.

மீண்டும் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வர இந்த காதலை கண்டித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் அன்று மீண்டும் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு திருச்சியில் உள்ள ஒரு காளியம்மன் கோவிலில் வைத்து விக்னேஷ் இருவரும் திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து சென்னையில் வசித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் திருத்துறைப்பூண்டி போலிஸாரிடம் வழக்கு பதிவு செய்தும் தனது மகளை மீட்க முடியாத நிலையில், நீதிமன்ற ஆட்கொணர்வு மனு செய்த நிலையில் தற்போது திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் விக்னேஷ் கண்ணனை கைது செய்து பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறி இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “உயரதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா?” : பெண் எஸ்.பி பாலியல் தொல்லை விவகாரத்தில் நீதிபதி காட்டம்!