Tamilnadu

வழிபாட்டுத் தலங்களை எல்லா நாட்களிலும் திறக்க அனுமதி.. 11 மணி வரை கடைகள் இயங்கலாம் : முதலமைச்சர் உத்தரவு!

வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் அத்தியாவசியத் தொழில்கள், பொழுதுபோக்கு சார்ந்த பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், பல்வேறு தளர்வுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட உத்தரவில், "அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மழலையர், நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள், அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: தியேட்டர்களை திறக்க அனுமதி.. ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு - முழு விவரம் இங்கே..!