Tamilnadu

சிக்காமல் கல்தா கொடுக்கும் புலி; முடங்கிய மக்கள்: அத்தியாவசிய பொருட்கள் வழங்கி அசத்திய கூடலூர் பேரூராட்சி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவன்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 4 நாட்களாக இதுவரை மூன்று பேரை வேட்டையாடியும் நாள்தோறும் மாடுகளை வேட்டையாடி வரும் புலி, தேவன் பகுதியில் நடமாடி வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டபோதும் இந்த இரு நாட்களில் மூன்றுக்கு மேற்பட்ட பசுமாடுகளை வேட்டையாடியது.

தொடர்ந்து அதே பகுதியில் வனத்துறையினரை ஏமாற்றி நடமாடி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களை இந்த புலி தாக்கும் ஆபத்து உள்ளதால் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பணிக்கு செல்ல வேண்டாம் எனவும், பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு செல்ல வேண்டாம் எனவும், தொடர்ந்து அப்பகுதிக்கு வரும் அரசு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தேவன், மேப்பில்ட், விலங்கூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுவரை மக்களின் அன்றாட உணவு தேவைக்காக தேவன்சோலை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக முதல் கட்டமாக 200 குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் சமைப்பதற்கான இதர பொருட்களும் மேலும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

கூடலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேரூராட்சி செயல் இயக்குநர் வேணுகோபால், கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் உட்பட அதிகாரிகள் தேவன் கிராமப் பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கு சென்று இந்த உணவு பொருட்களை வழங்கினர்.