Tamilnadu

“புதையலுக்கு ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுக்க முயன்ற கணவர்” : மகாராஷ்டிராவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அடிக்கடி சுடுகாட்டிற்குச் சென்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் மனைவி மீனா வீட்டில் இருக்கும் போது பெண் மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வந்த பெண் மந்திரவாதி பூஜை அறைக்குச் சென்று, சில மந்திர பூஜைகளை செய்துள்ளார். அந்த பூஜையின் போது உனக்கு புதையல் வேண்டும் என்றால் யாரையாவது நரபலிக் கொடுக்கவேண்டும் என்று அந்த மந்திரவாதி கூறியுள்ளார்.

புதையல் ஆசையில் தனது மனைவியை நரபலி கொடுத்துவிடலாம் எனக் கூறி, மனைவி மீனாவை பூஜைக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீனா சம்மதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி, தனது தந்தையிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து மீனா தந்தை அளித்த புகாரின்பேரில் போலிஸார் பெண் மந்திரவாதி மற்றும் கணவர் சந்தோஷ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அந்த பெண் மந்திரவாதி வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்றக் கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “யானையை காப்பாற்றச் சென்ற புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பலி”: ஒடிசாவில் மீட்பு பணியின் போது நடந்த சோகம்!