Tamilnadu

தயார் நிலையில் AC பஸ்கள்; தொற்று பரவாத வகையில் முடுக்கிவிடப்பட்ட ஏற்பாடுகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் R.S. ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் கொரோனா பேரிடர் காலமென்பதால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது முதல்வரின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 702 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 60 நகர குளிர்சாதன பேருந்துகள், 402 இருக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதனப் பேருந்துகள், 34 படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள், 206 இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் என மொத்தம் 702 குளிர்சாதனப் பேருந்துகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இயக்கப்பட உள்ளன.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 48 பேருந்துகள், சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 340 பேருந்துகள், விழுப்புரம் கோட்டத்தில் 92, சேலம் மற்றும் கோயம்புத்தூர் கோட்டத்தில் தலா 50, கும்பகோணம் கோட்டத்தில் 52, மதுரையில் 40 திருநெல்வேலியில் 30 என அனைத்து கோட்டங்களிலும் 702 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதற்காக பேருந்துகள் செம்மையாக பராமரிக்கப்பட்டு தொற்று பராவாத வண்ணம் மருந்துகள் தெளிக்கப்பட்டு அனைத்து கோட்டங்களிலும் குளிர்சாதனப் பேருந்துகள் இயங்க தயார் நிலையில் உள்ளது.

பேருந்துகளில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்றும் அனைத்துப் பேருந்துகளிலும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்பு தான் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிருமிநாசினிகளை நடத்துனர் மூலம் பயணிகளுக்கு அளிக்க நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பேருந்து சேவைகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Also Read: செயல்பாட்டுக்கு வருகிறது Made In Tamilnadu: போயிங் உதிரி பாகங்களை தயாரிக்க சேலம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!