Tamilnadu

தலைக்கேறிய போதை; கட்டுப்பாட்டை இழந்த கார்; தந்தை உட்பட மூவருக்கு காயம் - எழும்பூரில் நடந்த பரபரப்பு!

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் குடிபோதையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எழும்பூர் எத்திராஜ் பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவர் தனது 2 மகள்கள் மற்றும் மகளின் தோழியுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது காசா மேஜர் சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் ஒரு நானோ கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நானோ காரில் பயணித்த தந்தை மற்றும் இரண்டு மகள்கள், ஆட்டோ ஓட்டுநர்,மற்றும் அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் நானோ கார் ஓட்டி வந்த வில்சன் என்பவருக்கு மார்பு மற்றும் கால் பகுதியில் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களுக்கும் தொடர் சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிந்ததிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து ஏற்படுத்திய அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயத 56) என்ற நபரை கைது செய்த ஆய்வாளர் இந்திரா சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விபத்தின் போது அதிகளவில் மது அருந்தி வாகனத்தை இயக்கியது விபத்திற்கு காரணம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பான காசா மேஜர் சாலையில் குடிபோதையில் அதிவேகமாக தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி 5வாகனங்கள் சேதம் அடைந்து 3 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.