Tamilnadu

மீட்கச் சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி.. தந்தை சடலத்தைக் கண்டு கதறி அழுத தீயணைப்பு வீரர்!

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கோலிபாலப்பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

இந்நிலையில், கோலிபாலப்பகுதியில் உள்ள புன்னங்குள ஆற்றில் சடலம் ஒன்று கரை ஒதுக்கி இருப்பதாகத் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னர் சடலத்தை மீட்டனர்.

அப்போது இறந்தவர் சடலத்தை ஆய்வு செய்தபோது, தீயணைப்பு வீரர் பாலா என்பவரின் தந்தை ராமசாமி என்பது தெரிந்தது. தந்தையின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாலா சம்பவ இடத்திலேயே கதறி அழுதார். பின்னர் உடன் சென்ற சக வீரர்கள் பாலாவிற்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர்.

பின்னர் போலிஸார் ராமசாமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெளியூர் செல்கிறேன் என்று கூறியவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: டெல்லிவரை செல்வாக்கு இருக்கு.. மருத்துவ சீட்டு வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த பா.ஜ.க தம்பதி!