Tamilnadu

செல்பி எடுக்கும் கேப்பில் செல்போனை ஆட்டையப்போட்ட திருடன்: போலிஸில் நடிகர் விமல் பரபரப்பு புகார்!

களவாணி, பசங்க, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்பட பல தமிழ்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், "கடந்த 12-ம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ரசிகர்கள் என்னுடன் செல்பி எடுத்து கொண்டனர். அப்போது என்னுடைய விலை உயர்ந்த செல்போனை அங்கு அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருந்தேன்.

திரும்பி வந்து பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. அதன் பிறகு கடந்த 3 நாட்களாக தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காவல்துறை என்னுடைய செல்போனை கண்டுபிடித்து தரும்படி கேட்டு கொள்கிறேன்" என்று புகாரில் நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் கானாத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கானாத்தூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மதுரையில் நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் 10 சவரன் நகையை திருடிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மதுரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதே விக்னேஷ்தான் மதுரையில் திருடுவதற்கு முன்பாக கானாத்தூர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதாக தெரிகிறது. அதனால் இவர் நடிகர் விமலின் செல்போனை திருடியிருக்கலாமா என்று சந்தேகத்தின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: "நடிகர் சூரி இல்லத் திருமண விழாவில் 10 பவுன் நகை திருட்டு"... CCTV காட்சிகளை கைப்பற்றி போலிஸ் விசாரணை!