Tamilnadu

"முகத்தில் சிறுநீர் கழித்து, செருப்பால் அடித்து வன்கொடுமை” : காதலை ஏற்காத சாதிவெறி கும்பல் அட்டூழியம்!

காதல் திருணம் செய்து கொண்ட வாலிபரின் உறவினர்களை கடத்திச் சென்று முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்திய சாதி வெறி கும்பல் மீது போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த பன்னிப்பட்டி கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகனான ரமேஷும், வேறு சமூகத்தைச் சேர்ந்த கதிரியப்பன் என்பவரின் மகள் மோகனாவும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 10ஆம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து ஊரை விட்டு தலைமறைவாகினர். இதனால் மோகனாவின் பெற்றோர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மோகனாவின் உறவினர்கள் சிலர் ரமேஷின் உறவினர்கள் மூன்று பேரை அருகே உள்ள எல்லப்பன் பாறை மாந்தோப்பிற்கு காரில் கடத்தி சென்று அடித்து உதைத்து மது குடிக்க வைத்தும், முகத்தில் சிறுநீர் கழித்தும் செருப்பால் அடித்தும் அவமதித்துள்ளனர்.

இந்தக் கொடுமை தாங்காமல் அலறியவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதி மக்கள் வந்து காயமடைந்த இருவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பெண்ணின் குடும்பத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான ரமேஷின் உறவினர்கள் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளரிடம் எஸ்.சி.,எஸ்டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் அளித்தனர்.

இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சாதிவெறி காரணமாக முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பக்கத்து வீட்டாருடன் சண்டை.. குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்த சிறுவர்கள் : சிவகாசியில் பகீர் சம்பவம்!