Tamilnadu

"நடிகர் சூரி இல்லத் திருமண விழாவில் 10 பவுன் நகை திருட்டு"... CCTV காட்சிகளை கைப்பற்றி போலிஸ் விசாரணை!

மதுரை சிந்தாமணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் கடந்த வியாழனன்று நடிகர் சூரியின் அண்ணன் மகளின் திருமண விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், ஆர்யா, ரோபோ சங்கர், இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண விழாவின்போது கூட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் ஒருவர் மணமகள் அறைக்குள் புகுந்து 5 பவுன் தங்க சங்கிலி, 3 பவுன் தங்க மாலை, 2 பவுன் கை செயின் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். இதனை அறிந்து திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து நடிகர் சூரியின் மேலாளர் சூர்யபிரகாஷ் கீரைத்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சூரியின் அண்ணன் மகளின் திருமண விழாவில் நகை திருடப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இன்றைய முதலமைச்சர் முனைப்புடன் உள்ளார்.. நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு பெறுவோம்” : கி.வீரமணி பாராட்டு!