Tamilnadu

வியாபாரிகளிடம் வேலையை காட்டிய போலி IPS : பொறிவைத்து பிடித்த போலிஸ் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்!

நாகையில் உள்ள கடைகளில் ஐ.பி.எஸ் அதிகாரி எனக் கூறி பொருட்களை வாங்கிக்கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் ஒருவர் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து வியாபாரிகள் சிலர் போலிஸில் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று அந்த ஐ.பி.எஸ் அதிகாரி மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலிஸார் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஐ.பி.எஸ் அதிகாரி என்று பொய் சொல்லி வியாபாரிகளை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம், ஜமீன்புதூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ளார்.

பிறகு அந்த அதிகாரி பதவி உயர்வு கிடைத்து நாகைக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து மகேசும் நாகைக்கு வந்து தனது பெயரை மாற்றி மகேந்திர வர்மா எனக் கூறி, தான் வடமாநிலத்தில் டி.ஐ.ஜியாக இருப்பதாகவும், தனது மனைவி இன்ஸ்பெக்டர் என்றும் கூறி பல்வேறு இடங்களில் மோசடி செய்து வந்துள்ளார்.

மேலும் போலிஸ் அதிகாரிகள் சிலரிடம் பதவி உயர்வு வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியும் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான மகேஷிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read: "வேலை இல்லை... மனைவி திட்டியதால் போலி உதவி கமிஷனர் ஆனேன்" : விசாரணையில் ‘பகீர்’ கிளப்பிய விஜயன்!