Tamilnadu

“நண்பனையே உயிரோடு புதைக்க முயன்ற வாலிபர்கள்” : தூத்துக்குடி அருகே வெறிச்செயல்!

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரும், முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த தேவ ஆசீர்வாதம் (39), முள்ளக்காடு தேவி நகரை சேர்ந்த தர்ம முனியசாமி (23), கக்கன்ஜி நகரைச் சேர்ந்த இசக்கி மணி (20) ஆகியோரும் நண்பர்கள்.

அஜித்குமார் செல்போன் வாங்குவதற்காக நண்பரான தேவ ஆசீர்வாதத்திடம் ரூ.5 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அந்தப் பணத்தை நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மது அருந்தி செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்தையாபுரத்தில் உப்பளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, தேவ ஆசீர்வாதம் தான் கடனாக கொடுத்த ரூ.5 ஆயிரத்தை அஜித்குமாரிடம் திருப்பி கேட்டார். அதற்கு அஜித்குமார், “அந்தப் பணத்தை நாம் எல்லோரும் சேர்ந்துதான் மது குடித்து செலவழித்தோம். எனவே நான் மட்டும் எப்படி திருப்பி தர முடியும்” என்று கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகியோர் அருகே கிடந்த கம்பால் அஜித்குமாரை தாக்கியுள்ளனர். மேலும் தேவ ஆசீர்வாதம் கையில் வைத்திருந்த கத்தியால் அஜித்குமாரின் முதுகில் தாக்கியுள்ளார்.

ஆத்திரம் அடங்காமல், தேவ ஆசீர்வாதம், தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகியோர் அஜித்குமாரை உயிரோடு புதைக்க முடிவு செய்துள்ளனர். அங்கிருந்த குழியில் அஜித்குமாரை உயிரோடு தள்ளி மண்ணைப் போட்டு மூடியுள்ளனர்.

மார்பளவு மண் மூடியதும் மரண பயத்தில் அஜித்குமார் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்துள்ளனர்.

இதையடுத்து 3 பேரும் அஜித்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். பினன்ர் பொதுமக்கள் அஜித்குமாரை குழியில் இருந்து மீட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், முத்தையாபுரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, தேவ ஆசீர்வாதம், தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை தாக்கி உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘தீரன்’ பட பாணியில் தனி வீடுகளை குறிவைத்து கொள்ளை : போலி பூசாரி உட்பட 8 பேர் கைது - ‘பகீர்’ சம்பவம்!