Tamilnadu

”விடியலுக்கான அரசு என நிரூபித்த தி.மு.க. அரசு” - ஏலகிரி மலைவாழ் மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய எம்.எல்.ஏ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது ஏலகிரி. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிலாவூர் அருகே உள்ள கடுகாடு வட்டம் கிராமத்தில் சுமார் 25 மலைவாழ் குடும்பங்கள் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டு காலமாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் அதிமுக அமைச்சரவையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் வீரமணி. இவரிடம் பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்றவர் திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்.

கடுகாடு மக்கள்

அவரிடம் கடந்த மாதம் ஏலகிரி மலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது மலைவாழ் மக்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில் நாங்கள் மின்சாரம் இல்லாமல் இந்த நவீன காலத்தில் வாழ்ந்து வருவதாகவும் பலமுறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் படிக்கும் மாணவர்களும் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்திருந்தனர். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மின்சாரவாரிய துறைக்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து நிலாவூருக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதை தொடர்ந்து தற்போது நிலாவூர் அருகே உள்ள கடுகாடு வட்டம் பகுதியில் மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பல ஆண்டு காலமாக எங்களை இருட்டில் இருந்தவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. விடியல் அரசு என்று தமிழக முதல்வர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், மின்வாரிய துறை உயர் அதிகாரிகளுக்கு அப்பகுதி மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.