Tamilnadu

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி: ரூ.2.5 கோடியை மீட்டுத்தரக் கோரி சென்னை போலிஸிடம் முறையீடு!

சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் மும்பையை சேர்ந்த ஷரன் தம்பி இருவரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட நபர்கள். இதை மூலதனமாக வைத்து செவித்திறன் பாதித்தோர் விளையாட்டுக்கழகம் என்ற அமைப்பை துவங்கி அதன் மூலமாக மாற்றுத்திறனாளிகள் தொடர்பை ஏற்படுத்தி ஷரன் தம்பியிடம் ஐஐசிடி என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக தருவதாக ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் முதலீடு செய்ய வைத்து தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் ரூபாய் 2.1/2 கோடி பணத்தை பெற்றுள்ளனர்.

45 நாட்கள் கடந்த நிலையில் நாட்களை கடத்திய சந்தோஷ்குமார் பல காரணங்களை கூறி பல மாதங்களாக ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும் புகாரை காவல்துறையினர் ஏற்க மறுப்பதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும் பணத்தை ஏமாற்றிய சந்தோஷ் குமாரின் தாயார் ரேவதி அதிமுக மகளிர் அணியில் இருப்பதாகவும் பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் சந்தோஷ்குமாரிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி சாமி என்பவர் மன உளைச்சலில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி குடும்பத்தை நடத்த இயலாத நிலையில் இருக்கும் தங்களுக்கு காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி சென்னை கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Also Read: மேட்ரிமோனி மூலம் மோசடி... நகை பணத்தை அபேஸ் செய்த பெண்... கையும் களவுமாகப் பிடித்த திண்டுக்கல் இளைஞர்!