Tamilnadu

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” : மோடி அரசுக்கு டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தல்!

இட ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் உச்ச வரம்பு நீக்கப்பட வேண்டும் என மக்களவையில் கழகக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை முடிவு செய்யும் உரிமையை மீண்டும் மாநிலங்களுக்கு வழங்கும் வகையிலான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முத்தமிழறிஞர் கலைஞர் ஓபிசி பிரிவினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதை நினைவு கூர்ந்தார்.

கலைஞர் உள்ளிட்டவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து வி.பி.சிங் ஆட்சியில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்ததை டி.ஆர் பாலு சுட்டிக்காட்டினார். 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு சதவீதத்தை முடிவு செய்யும் அதிகாரம் முழுமையாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Also Read: தரமான உணவுகள் கூட கிடைக்காத நிலையில் இந்திய வீரர்கள் - ஒலிம்பிக் பதக்கம் உணர்த்தும் பாடம் என்ன?: முரசொலி!