Tamilnadu

"நீதிபதிகள் மிரட்டப்படுகிறார்கள்... CBI-யோ, போலிஸோ உதவுவதில்லை" : தலைமை நீதிபதி வேதனை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் மீது வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு நீதிபதிகளுக்குப் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் கடுமையான விமர்சனங்களை உச்சநீதிமன்ற நீதிபதி முன்வைத்துள்ளார். வழக்கின் விவாதத்தின் போது, "மத்திய புலனாய்வு அமைப்போ, உளவுப் பிரிவோ நீதிபதிகளுக்கு உதவுவதில்லை. நீதிபதிகள் பலமுறை உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர்.

சமூக விரோதிகள், தாதாக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர். அதேபோல் பிரபலமானவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போதும் நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர்.

மேலும் ஒருவருக்குப் பாதகமான தீர்ப்புகளை வழங்கும்போது, நீதிபதிகள் பற்றி அவதூறு பரப்பும் போக்கு உருவாகியுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் வருகின்றன. நீதிபதிகளுக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து ஒன்றிய அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also Read: “சொல்வது ஒன்று... செய்வது ஒன்று” : WiFi வசதி திட்டம் ரத்து - ரயில் பயணிகளை ஏமாற்றிய ஒன்றிய அரசு !