Tamilnadu

“10 ஆண்டுகால போராட்டம்.. பதவிக்கு வந்ததுமே நடவடிக்கை..” : முதலமைச்சரின் உத்தரவால் நெகிழ்ந்த திருநங்கைகள்!

திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் நெருப்பெரிச்சல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் வீடில்லா ஏழைகளுக்கும் நீர்நிலைப் பகுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில் நெருப்பெரிச்சல் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருநங்கைகளுக்கான வீடுகள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 256 வீடுகளில் முதல் கட்டமாக 45 திருநங்கைகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. முதற்கட்டமாக நபர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஒதுக்கீடு ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், “10 ஆண்டுகாலமாக திருநங்கைகளுக்கு வீடு கேட்டு போராடி வருகிறோம். ஆனால் எந்த பயனும் இல்லாமல் இருந்தது. தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வந்தபொழுது திருநங்கைகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவரிடம் நேரில் மனு கொடுத்ததும், ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், தற்போது திருநங்கைகள் 45 பேருக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கையை 100 நாட்களுக்குள் பரிசீலனை செய்து வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு எங்களது நன்றி எனத் தெரிவித்தனர்.

மேலும் முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் திருநங்கைகள் ஏழ்மையான சூழ்நிலையில் வசிப்பதால் தங்களது ஒதுக்கீடு தொகையைக் குறைப்பதற்கு அல்லது இலவசமாக வீடு வழங்குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Also Read: “ஒரே இரவில் 40 கி.மீ நடந்து சொந்த கிராமத்திற்கு வந்த காட்டு யானை”: ரிவால்டோ யானை குறித்த சிறப்பு செய்தி !