Tamilnadu

“அவசரகதியில் செயல்பட்ட பழனிசாமி.. விரைவில் ஆன்லைன் விளையாட்டு தடைச் சட்டம் வரும்”: அமைச்சர் ரகுபதி உறுதி!

அவசர கதியில் அ.தி.மு.க நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்‌.ரகுபதி‌ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டைத்‌ தடை செய்ய வேண்டும்‌ எனத் தி.மு.க‌ சார்பில்‌ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதைத்‌ தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர்‌ 21ஆம்‌ தேதி “ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டிற்குத்‌ தடை விதித்து” அவசர கதியில்‌ சட்டம்‌ ஒன்றை அ.தி.மு.க அரசு நிறைவேற்றியது.

அ.தி.மு.க அரசின்‌ சட்டத்திற்கு எதிராகத்‌ தொடரப்பட்ட வழக்கில்‌, தமிழக அரசின்‌ சார்பில்‌ தலைமை வழக்கறிஞர்‌ வாதிட்டு, உரிய கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்தபோதிலும்‌, “இந்த விளையாட்டுகள்‌ ஏன்‌ தடை செய்யப்படுகின்றன என்பது குறித்துப் போதுமான காரணங்களைச் சட்டம்‌ நிறைவேற்றும்‌போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும்‌ உரிய விதிகள்‌ இல்லாமல்‌ ஆன்லைன்‌ விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது” என்று கூறி, தமிழக அரசின்‌ ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டைத் தடை செய்யும்‌ சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்‌ தீர்ப்பளித்துள்ளது.

ஆனாலும்‌, உரிய விதிமுறைகளை உருவாக்கிப் புதிய சட்டம்‌ கொண்டு வருவதற்குத்‌ தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம்‌ இதே தீர்ப்பில்‌ தெளிவுபடுத்தியிருக்கிறது.

பொது நலன்‌ மிக முக்கியம்‌ என்பதால்‌, உரிய விதிமுறைகள்‌ மற்றும்‌ தகுந்த காரணங்களைத்‌ தெளிவாகக்‌ குறிப்பிட்டு, எவ்விதத் தாமதமும் இன்றி, ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யும்‌ சட்டத்தைக்‌ கொண்டு வரவேண்டும்‌ என முதலமைச்சர்‌ நேற்றைய தினம்‌ தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார்‌.

ஆகவே, முதலமைச்சரின்‌ ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில்‌ ஆன்லைன்‌ ரம்மி போன்ற விளையாட்டுகளைத்‌ தடை செய்யும்‌ சட்டம்‌ விரைவில்‌ கொண்டுவரப்படும்‌” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: முகம் வெளிறிய OPS-EPS, பதற்றத்தில் வேலுமணி-தங்கமணி, சிக்கலில் விஜயபாஸ்கர் : வெள்ளை அறிக்கையால் கலக்கம்!