Tamilnadu

திருத்தணி அருகே தொழிலதிபர் தம்பதியினரை கடத்தி கொலை : அ.தி.மு.க பிரமுகரின் மகன் உட்பட 3 பேர் கைது!

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவி ரெட்டி தனது மனைவி மாலாவுடன் கடந்த 29ஆம் தேதி மயமானதாக காவல்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருத்தணி காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குண்டா காட்டுப்பகுதியில் ஆண் மற்றும் பெண் சடலங்கள் அழுகிய நினையில் கிடப்பதாக ஆர்.சி.புரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்ட போலிஸார், விசாரணை மேற்கொண்டதில், திருத்தணியை சேர்ந்த தம்பதியர் சஞ்சீவி ரெட்டி மற்றும் அவரது மனைவி மாலா எனத் தெரியவந்தது.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆந்திரா போலிஸார், கொலை குறித்து புலனாய்வில் ஈடுபட்டனர். அதேவேளையில் இந்த வழக்கை திருத்தணி காவல்நிலையத்திற்கு மாற்றி விசாரித்ததில், இந்த கொலைச் சம்பவத்தில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் தாண்டவராயன் மகன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

மேலும், அ.தி.மு.க பிரமுகர் தாண்டவராயன் மகன் ரஞ்சித் குமார், தொழிலதிபர் சஞ்சீவி ரெட்டிக்கு உறவினர் என்றும், சஞ்சீவி ரெட்டியின் தங்கை மகன் தான் ரஞ்சித் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தொழிலதிபர் தம்பதியினரை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, பணம் மற்றும் நகைக்காக கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் தாண்டவராயனின் இளைய மகன் ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ராபர்ட் என்கின்ற மற்றொரு ரஞ்சித்குமார், விமல்ராஜ் ஆகியோர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கார்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தன் காதலுக்கு போட்டியாக இருந்த நண்பனை வெட்டிக் கொன்ற சிறுவன் : திட்டம் போட்டுக் கொலை செய்தது அம்பலம்!