Tamilnadu

முதலமைச்சரின் முயற்சியால் புத்துணர்வு பெறும் தொழில் நிறுவனங்கள்; நன்றி தெரிவித்த தொழில் முனைவோர்!

அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மாநாட்டினை தமிழ்நாடு அரசு நடத்தியது. இதன் மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக சேலம் ALC  நிறுவனம் சார்பில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1100 நபர்களுக்கு நேரடியாகவும், 2 ஆயிரம் நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்கிட முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ALC  ஜவுளி ஏற்றுமதி நிறுவன நிர்வாக இயக்குநர் அழகரசன், முதலமைச்சர் அளித்த ஊக்கத்தால் சேலம் மாவட்டத்தில் 170 கோடி முதலீட்டில் அதி நவீன நூற்பாலை மற்றும் நெசவு ஆலை நிறுவி 400 நபர்களை பணியமர்த்த உள்ளதாகவும், கரூர் மாவட்டம் குளித்தலையில் 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் 330 கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன நூற்பாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை நிறுவி 700 நபர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்தார்.

முதலீட்டாளர்களின் அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் பூர்த்தி செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும், இது முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அழகரசன் மேலும் கூறினார்.