Tamilnadu

“+2 கூட தேர்ச்சி பெறாதவர் உதவி பேராசிரியரா?” : சர்ச்சையில் அண்ணாமலை பல்கலைக்கழகம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக நிர்வாக குளறுபடிகள் ஏற்பட்டு வந்ததால் இந்த பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என அங்கு பணியாற்றும் ஊழியர்கள் முதல் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தி வருகிறது. பின்னர் பல்கலைக்கழகத்தில் அதிகமான பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்ததால், வேறு கல்லூரிகளுக்குப் பணி நிரவல் செய்யும் பணி 2013ம் ஆண்டு முதலே நடைபெற்று வருகிறது.

இதன்படி கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரிக்குப் பணி நிரவல் செய்யப்பட்டத்தில் 12ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவர் ஒருவர் உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் பெரியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த சுசித்ர வர்மா என்பவரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, அவர் 12ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதது தெரியவந்துள்ளது. மேலும், உதவிப் பேராசிரியருக்கான அடிப்படைத் தகுதியான பி.எச்டி அல்லது NET அல்லது SLET ஆகியவற்றில் எந்தத் தகுதியையும் அவர் பெற்றிருக்கவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.

அதேபால், சரவணகுமார் என்பவர் 2003ம் ஆண்டு மே மாதத்தில் இளநிலை பட்டம் முடித்ததாகவும், 2004ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றதாகவும் சான்றிதழ்கள் வழங்கியுள்ளார் 18 மாத்தில் அவர் எப்படி முதுநிலை பட்டம் பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பின்னர் இந்த இரண்டு பேரையும் பெரியார் கல்லூரி நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. ஆனால் இவர்கள் மீண்டும் அண்ணாமலை பல்கலையிலேயே பணியாற்றி வருகிறார்கள். இப்படி இவர்கள் இரண்டு பேர் மட்டுமல்ல பலர் முறைகேடாக பணியில் சேர்ந்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 860 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 ஆயிரத்து 896 பேர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆசிரியர் அல்லாத 1,110 பணியிடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 9 ஆயிரத்து 434 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாணவர் அமைப்புகளும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: கட்டிக் கொண்டிருக்கும்போதே இடிந்த சுவர்... அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மருமகனின் ‘டெண்டர் ஜாலம்’!