Tamilnadu

ரகளை டிராமா போட்டு தப்பித்த அ.தி.மு.க பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது... பின்னணி என்ன?

அ.தி.மு.க மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில் போலிஸாரிடமிருந்து தப்பியோடி பின்னர் கைதான நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கல்யாண ஓடை பகுதியை சேர்ந்தவர் துரை செந்தில். இவர் மதுக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக உள்ளார். இவரது மனைவி அமுதா மதுக்கூர் ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகிக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக போலிஸார்கடந்த 14ஆம் தேதி துரை.செந்திலை கைது செய்து மதுக்கூர் காவல்நிலையம் அழைத்து வந்த நிலையில், அங்கு திரண்ட துரை.செந்திலின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனைப் பயன்படுத்தி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் துரை.செந்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

ரகளை, கூச்சல், குழப்பங்கள் ஓய்ந்து சூழல் அமைதியான பின்னரே துரை.செந்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது போலிஸாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அ.தி.மு.கவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் போலிஸார் தனிப்படை அமைத்து சென்னையில் மறைந்திருந்த துரை.செந்திலை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், துரை.செந்தில் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Also Read: ரூ.600 கோடி வரை மோசடி.. பா.ஜ.க-வை சேர்ந்த ‘ஹெலிகாப்டர்’ தொழிலதிபர்கள் தலைமறைவு.. போலிஸ் வலைவீச்சு!