Tamilnadu

கடல் வழியாக சிலைகள் கடத்தல்? சென்னை கடற்கரையில் ஒதுங்கிய ஐம்பொன் சிலைகள் - தீவிர விசாரணை இறங்கிய போலிஸ்!

சென்னை பெசன்ட் நகர் பகுதிக்கு உட்பட்ட ஓடைக்குப்பம் என்ற ஓடை மாநகர் பகுதியின் அருகில் உள்ள கடற்கரையோராமாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது கடற்கரை ஓரமாக சிலைகள் ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட 5 சிலைகள் சுமார் அரை அடி உயரத்தில் உள்ளன. இதில் ஒரு அர்த்தநாரீஸ்வரர் சிலை, ஒரு பீடம், ஒரு அனுமர் சிலை மற்றும் 2 யானை சிலைகள் உள்ளன. இதில் அனுமர் சிலையின் மீது 1875 என்று வருடம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருகில் உள்ள பழண்டி அம்மன் கோவிலின் உள்ளே வைத்து விட்டு, காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலைகளை கண்டெடுத்த பொது மக்களிடம் கேட்டபோது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி அதன் பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து வேளச்சேரி தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே தமிழகத்திலிருந்து சேர, சோழ கால சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி பல கோடி ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதும் அவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கடற்கரை ஓரம் சிலைகள் ஒதுங்கி உள்ளதால் கடல் வழியாக ஏதேனும் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தல் முயற்சி ஏதும் ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.