Tamilnadu

கடல் வளத்தை அழிக்கும் மோடி அரசின் தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா... தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டம்!

ஒன்றிய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற உள்ளது. இதில் குறிப்பாகத் தேசிய கடல் மீன்வள கொள்கை 2021 என்ற மசோதாகவை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடும் என்பதால் இதற்கு எதிர்க்கட்சிகளும், மீனவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்த மசோதாவில், மீனவர்கள் கடலுக்குள் 12 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் சென்று மீன் பிடித்தால் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மேலும் 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் கடலுக்குள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு அனுமதி அளிக்கவும் இந்த மசோதாவில் இடம் உள்ளதாக மீனவர்கள் கூறுகிறார்கள். மேலும் இச்சட்டம் மீனவர்களுக்கு விரோதமான கருப்பு சட்டமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா 2021ஐ எதிர்த்து காசிமேட்டில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளில் கறுப்புக் கொடியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் ராமேஸ்வரத்திலும் மீனவர்கள் தேசிய கடல் மீன்வள வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியைக் கையில் ஏந்தி கடலில் இறங்கி ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களும், மீன்பிடி தொழிலாளர்கள் அமைப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து தங்களது எதிர்ப்பை கடும் போராட்டத்தின் மூலம் தெரியப்படுத்தப் போவதாகவும், மீனவர்களிடம் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாகக் கடல் வளத்தை அழிக்கும் வகையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “8,16,473 மாணவர்கள் தேர்ச்சி... திருப்தி இல்லையெனில் தேர்வு எழுதலாம்” : +2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு!