Tamilnadu

“10 ஆண்டுகளாக கவனிக்கப்படாத தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்” : பொன்குமார் உறுதி!

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக பொன்குமாரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பொன்குமார் கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில், பொன்குமார் நல வாரிய தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன், இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, தொ.மு.ச பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், தொ.மு.ச பொருளாளர் நடராசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்குமார், “கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமித்து முதலமைச்சருக்கு நன்றி. தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதைத் தனது முதல் பணியாக மேற்கொள்வேன். கடந்த பத்து ஆண்டு காலமாகக் கவனிக்கப்படாத தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாடு அரசின் தொகுப்பு திட்டத்தால் குறுவை சாகுபடியில் புரட்சி ஏற்படும்” : கொறடா கோவி.செழியன் பேட்டி!